மாவிலாற்றங்கரையில் புத்தர்-2006

இலங்கையில் நடந்து கொண்டிருந்த, அதாவது இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த சமாதானப் பேச்சு வார்த்தை, புலிகள் மாவிலாறு அணைக்கட்டை மூடி தண்ணீர் போக விடாமல் தடுத்ததும் முடிவுக்கு வந்து யுத்தம் மீண்டும் தொடங்கியதும் நினைவிருக்கலாம். ( அப்படி மூடாமல் இருந்திருந்தாலும் வேறு ஏதோ ஒரு விதத்தில் தொடங்கியிருக்கலாம்! ) ஒருவேளை அந்த நேரம் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அல்லது என்ன சொல்லியிருப்பார்? சீரியஸாக இந்த கேள்வியை கேட்டுக் கொண்டு விடை காண வேண்டும் என்றால், புத்தர் பற்றிய ஒரு முக்கியமான மாயை முடிவுக்கு வர வேண்டும்.



புத்தர் எவ்வாறு துறவு பூண்டார்? அரண்மனையில் சொகுசாக வளர்ந்தவர், ஒரு இளைஞராக வந்ததும், நகர் வலம் சென்று பார்க்க ஆசை வந்து தேரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த முதியவர், நோயாளி, மற்றும் ஒரு பிரேதம் இவற்றை வாழ்க்கையிலேயே முதன்முதலாக பார்த்து மனமுடைந்து, வாழ்வின் நிலையாமையை பற்றிச் சிந்தித்தார்; அரண்மனைக்குச் சென்று ஒரு நள்ளிரவுப் பொழுதில் மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் தவிக்க விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் கொண்டு சென்றுவிட்டார் என்று தானே பொதுவாக கூறுவார்கள். ஆனால் தற்போது சில புதிய ( அதாவது பழைய ) உண்மைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கூறப்படுகின்றன.

புத்தர் முதியவர்களையோ, நோயாளிகளையோ அல்லது இறப்பையோ அதுவரைக்கும் காணவில்லை என்பது லொஜிக் சற்றும் இல்லாதிருக்கிறது என்பது இவர்களுடைய வாதம். ஏனெனில் புத்தரின் தந்தை ஒரு வயதான முதியவர். மேலும் பல முதியவர்கள் ஆலோசகர்களாகவோ, உறவினர்களாகவோ இருந்திருப்பார்கள். 29 வயது வரை வளர்ந்த சித்தார்த்தனுக்கு அதுவரையில் ஒரு தலையிடி, காய்ச்சல் கூடவா வராமல் போயிருக்கும்? அவருக்கு இல்லாவிட்டாலும், கூடியுள்ளவர்களுக்கு ஒரு வியாதியாவது வராமல் போயிருக்குமா? ஒரு மரணம் கூடவா நிகழ்ந்திருக்காது? இத்தனைக்கும், புத்தரின் அன்னையே இறந்து விட, அவரை வளர்த்தது சித்தி தான்.

புத்தரின் துறவின் மெய்யான காரணம் இது தான். புத்தர் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களுக்கும் கோலியர்கள் என்று அழைக்கப்பட்ட இன்னொரு குழுவினருக்கும் இடையில் தண்ணீருக்காக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியார் அணைக்கட்டுகளில் பிரச்சனை நடப்பது போல. கமிஷன் வைத்து விசாரிக்கும் பழக்கம் எல்லாம் அப்போது இல்லை. ஹரி படம் மாதிரி அரிவாள், கம்பு என்று ஆயுதங்களுடன் மோதலில் இறங்கி விடுவது தான் வழக்கமாக இருந்தது.

அப்படி தான் ஒரு முறை ரோகினி ஆற்றங்கரையில் சாக்கியர்களும் கோலியர்களும் நதி நீருக்காக படை திரட்டிக்கொண்டு சண்டைக்குத் தயாராக நின்றார்கள். இதில் புத்தருக்கும் ( அப்போது சித்தார்த்தன் , சாக்கியர் தலைவனின் மகன், இளைஞன் ) படை வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் :

" போர்வீரர்களே ! எதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தயார் நிலையில் நிற்கிறீர்கள்? "

"எங்களது வறண்ட பூமிக்கு நீர் வேண்டும். அதற்காக தான்"

" அப்படி எனில் மதிப்பு குறைந்த தண்ணீருக்காக அதிக மதிப்பு வாய்ந்த இரத்தத்தை வீணாக்கலாமா? " கேட்டார் புத்தர்.

" இல்லை...வீணாக்கக் கூடாது " என்றார்கள் இருசாராரும்.

" அப்படிஎன்றால், ஆயுதங்களை எரிந்து விட்டு அமைதியாக உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்" என்றார் புத்தர்.

( நன்றி: அருணன், தர்மமும் சங்கமும்)

மேலும், இந்த நதி நீர் யுத்தம் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்த போது சித்தார்த்தனும் அதில் போரிட்டே ஆக வேண்டிய சூழல் வந்தது. இல்லையென்றால் அவரது குடும்பம் நாடு கடத்தப் படும். இப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் தான் போரில் ஈடுபடுவது நடக்கவே முடியாத, தன்னால் எக்காலத்திலும் இயலாத ஒரு காரியம் என்று சித்தார்த்தன் கருதியதாலும், குடும்பத்தின் மேல் தண்டனை சுமத்தப் படுவதைத் தடுக்கவும், ஏற்கனவே மூப்பு, பிணி, சாக்காடுகளால் மனம் பாதிப்புற்றிருந்த சித்தார்த்தன் துறவறம் என்ற முடிவை எடுத்தார்.


இப்போது, கற்பனை செய்து பாருங்கள். ரோகினி ஆற்றுக்கு பதிலாக மாவிலாறு. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் பதிலாக புலிகளும் இராணுவமும்! புத்தர், தான் அன்று சொன்னதையே திரும்பவும் சொல்லி இருப்பார். கேட்கும் பக்குவம் இவர்களுக்கும் இருந்திருக்காது, அன்று இல்லாததைப் போலவே. புத்தர் மீண்டும் ஒருமுறை துறவறம் பூண்டிருப்பார். இன்னும் எத்தனை தரம் தண்ணீருக்காக செந்நீர் ஓடுவதைத் தடுக்க அவர் துறவறம் ஏற்க வேண்டுமோ? பாவம் புத்தர்.




1 Response
  1. Anonymous Says:

    "29 வயது வரை வளர்ந்த சித்தார்த்தனுக்கு அதுவரையில் ஒரு தலையிடி, காய்ச்சல் கூடவா வராமல் போயிருக்கும்? அவருக்கு இல்லாவிட்டாலும், கூடியுள்ளவர்களுக்கு ஒரு வியாதியாவது வராமல் போயிருக்குமா? ஒரு மரணம் கூடவா நிகழ்ந்திருக்காது? இத்தனைக்கும், புத்தரின் அன்னையே இறந்து விட, அவரை வளர்த்தது சித்தி தான்."
    நன்றாக உள்ளது நன்றாக உள்ளது உங்கள் கருத்து..உண்மையிலேயே ஜோசிக்க வேண்டிய விடயம் தான்..


Related Posts Plugin for WordPress, Blogger...