துறவு என்னும் ஒரு போகம்

கடவுள் என்ற வார்த்தை எந்தளவுக்கு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறதோ, அதே போல சாமியார்கள் என்ற வார்த்தையும். இந்த சாமியார்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தையும் உளவியலையும் எம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. பல விடயங்கள் அவர்களின் காவி அங்கிக்கு உள்ளேயே மறைந்து போய் அவர்களின் வாழ்க்கையோடு முடிந்தும் போய் விடுகின்றன. இப்போது சாமியார்கள் என்றாலே யூ ட்யூப் இல் காட்சி தருபவர்கள் என்றோ இல்லை வாரப்பத்திரிகைகளின் நகைச்சுவைத் துணுக்குகளில் இடம் பிடிப்பவர்கள் என்றோ ஆகி விட்டது.

துறவு என்று வரும் பொது ஜைன ( ஜென் அல்ல! ) அதாவது சமண மதத் துறவிகள் தான் உங்களில் சிலருக்கும் ஞாபகம் வரக் கூடும். திகம்பர சாமியார்கள் என்று ஒரு வகை. ஆடை ஏதும் இன்றி வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பார்கள். அதுவும் சில வேளைகளில் வாரத்துக்கு ஒரு நாள் தான் அதுவும் ஒருமுறை பிச்சை எடுக்க வரும் போது ஒரு வீட்டில் தான் கேட்கலாம். கிடைக்கா விட்டால் பட்டினி. இவர்களை பற்றிய விசேஷம் என்னவென்றால், புழு பூச்சி ஏன், பாக்டீரியாக்களுக்கு கூட தீங்கு நினைக்காத ஜென்மம். வீதியால் நடந்து போகும் போது மூச்சுக் காற்று பட்டு காற்றில் உள்ள கிருமிகள் இறந்து விடக் கூடாதே என்று முன்னாள் விசிறிக் கொண்டே செல்வார்கள். தலை முடி இருந்தால், பேன் வந்து, பிறகு சொறியும் போது அவை இறந்து விடுமே! அதற்காக தலை முடியே வளர்ப்பதில்லை! தானாக வளரும் முடியை கைகளால் பொறுமையாக ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொள்வார்கள்.அகிம்சையே இவர்களின் வேதம். துறவி என்னும் போது திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமணரும் அனிச்சையாக ஞாபகத்துக்கு வரக் கூடும். இவரும் கடைசி வரை கட்டிய கோவணத்தோடு வாழ்ந்தார்.

புத்தர் கொல்லாமைத் தத்துவத்தை கடைப்பிடித்தவர். ஆனால் புத்த துறவிகள் மாமிசம் புசிப்பவர்கள் என்னும் செய்தியை கேள்விப் படுபவர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். விகாரைகளில் உள்ள புத்த துறவிகளுக்கு மக்கள் உணவு சமைத்து தானமாக வழங்கும் போது அதில் கட்டாயம் இறைச்சியும் இடம்பெறுகிறது. இங்கு பிரச்சனை நிச்சயம் இறைச்சி புசிப்பதல்ல. போதனையும் செயலும் வேறு படும் போது தான் பிரச்சனை எழுகிறது.


துறவு என்று வரும் போது தற்போதைய சாமியார்கள் அனைவரும் அதற்கு எதிர்மாறாக செயல்படுவது தான் உறுத்துகிறது. காவி உடை இருந்தாலும் வந்து அமர்வதற்கு தனியான விசேடமான கதிரை தேவைப்படுகிறது. சில நவீன சாமியார்கள் பட்டு ஆடைகள், அங்க வஸ்திரங்கள் அணிந்து காட்சி தருகிறார்கள். இருக்கும் இடமோ பல ஆயிரக் கணக்கான ஹெக்டையர் நிலத்தை வளைத்து பிடித்து கட்டப் பட்ட மாளிகையில். பயணம் செய்வதற்கு விலை உயர்ந்த கார், சுமோ மற்றும் பிற வாகனங்கள். சிலருக்கு குடும்பம் கூட இருக்கிறது. இப்படி இருக்கும் போது இவர்கள் எதைத் துறந்தார்கள் என்று இவர்களைத் துறவி என்று சொல்ல முடியும்?

இந்தியா நிறைய சாமியார்களை கண்டிருக்கிறது. அவர்களுக்குள் சீனியரான பிரேமானந்தா லிங்கம் எடுப்பதில் தன் போது வாழ்க்கையைத் தொடங்கி பின் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதாகி இப்போது இறந்தும் விட்டார். பிறகு சதுர்வேதி சாமிகள் என்று ஒருவர் வந்து அவரும் அதே வல்லுறவு வழக்கில் கைதாகி இப்போது சிறையில். காஞ்சி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைதாகி இப்போது வெளியில். போன அம்மா ஆட்சியில் கைதானபடியால் இம்முறையும் வழக்கு தோண்டி எடுக்கப் பட்டு புது உத்வேகத்தில் நடக்குமா என்பதை பார்க்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

சாய் பாபாவும் ஆரம்பத்தில் சித்து விளையாட்டுக்கள், அற்புதங்கள் மூலமாக பிரபலமானார். கையிக்குள் இருந்து லிங்கம் மற்றும் விபூதி இவரின் ஸ்பெஷல். இவர் எவ்வாறு இந்த அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்கான விளக்கங்களுடன் புத்தகங்கள் வெளியாகி இருந்தன. இவர் கைக்குள் இருந்து சங்கிலி எடுத்துக் கொடுத்த பக்தர்கள் பெரும்பாலும் பணக்கார வகுப்பை சேர்ந்தவர்கள். ரணில், அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் நல்ல உதாரணம்.

தற்போது எல்லாவற்றிலும் நவீனமானவர் அம்மா பகவான். ஆரம்ப காலத்தில் பாதம் அசைதல் போன்ற சித்து விளையாட்டுக்கள். பின்பு வழமை போலவே யோகா வகுப்புக்கள். இப்போது இது ஒரு பாணியாகவே எல்லோராலும் கடைப்பிடிக்கப் படுக்கிறது. சென்ற வருடம் அம்மா பகவானின் இடத்தில் பக்தர்கள் போதையில் விழுந்து கிடக்கும் காட்சியை பார்த்த போது ஒரு விஷயத்தை சிலர் கவனித்திருக்கக் கூடும். பொதுவாக அங்கே ' தீட்சை' க்கு சென்று விட்டு வருபவர்கள் குறிப்பாக முதியவர்கள் சொல்லுவது என்ன என்றால், அங்கே இருக்கும் போது உடலில் வழமையாக இருந்து வந்த வலிகள் எதுவும் இருக்கவில்லை என்பது தான். அவர்கள் சொல்லி தந்த ஆசனங்களை அந்த நேரத்தில் வலி இல்லாமல் செய்ய முடிந்தது என்றும் கூறுவார்கள். அதுகூட பிரசாதத்தில் சிறிய அளவில் போதைப்பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டால் அவை வலி நிவாரணியாகத் தொழிட்பட்டதாலும் இருக்கலாம் அல்லவா?

கமல் சொல்லுவதாக ஒரு படத்தில் வசனம் ஒன்று வருகிறது. கடவுள் இருக்கு என்று சொல்லுபவனையும் நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்லுபவனையும் நம்பலாம், ஆனால், நான் தான் கடவுள் என்று சொல்லுகிறானே அவனை மட்டும் நம்பக் கூடாது என்று சொல்லுவார். உண்மையில் பழைய காலங்களில் பிச்சை எடுத்து உண்ட சாமிகள் கூட தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டதில்லை. இப்போதோ, எல்லோருமே நான் கடவுள் என்று புறப்பட்டு விட்டதால் தான் சிக்கல். சாய் பாபாவும் அவதாரம் அம்மா பகவானும் அவதாரம் என்றால், மொத்தமே பத்து அவதாரங்கள் தானே படித்திருக்கிறோம்? இப்போது மொத்த அவதாரங்களின் எண்ணிக்கை பத்தையும் தாண்டி இருக்கும்!

இதில் பாவம் நித்யானந்தா. கதவை திற காற்று வரட்டும் என்று அவர் தன்னை பற்றி எழுப்பி வைத்திருந்த தூய அறிவார்ந்த துறவி என்னும் பிம்பம் தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ வெளியான போது சரிந்து வீழ்ந்தது. உண்மையில் அவர் அவ்வாறு நடந்தது கொண்டது கூட பிழை அல்ல. விஸ்வ மித்திரர், கௌசிகர் என்று எல்லா புராண முனிவர்களும் பச்சிலர் களாகவா இருந்தார்கள்? நித்யானந்தா தன் சீடர்களுக்கு மட்டும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தியது தான் தவறு என்று தோன்றுகிறது. இதில் மிகப்பெரும் அநியாயம் இழைக்கப் பட்டது ரஞ்சிதாவுக்குத் தான். எல்லா ஊடகங்களும் மக்களும் ஏதோ அவர் தான் பிழை செய்து விட்டது போல தூக்கிப் பிடித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நியாயமான கருத்தை வெளியிட்டவர் பத்திரிகையாளர் ஞானி மட்டுமே. உண்மையில் ரஞ்சிதா திருமணத்துப் புறம்பாக உறவு வைத்திருந்தது நிரூபிக்கப் பட்டால் கூட அவரை எந்த சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்? அந்த நாட்டில் அதற்குரிய சட்டம் இல்லாதவரை அவர் எந்தவிதத்திலும் குற்றவாளியாக மாட்டார். உண்மையில் ஞானி அவர்கள் கூறி இருந்தது போல ரஞ்சிதா வீடியோ எடுத்தவர்கள் மற்றும் அதை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டு பல நஷ்டங்களை உண்டாக்கியமைக்கு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். ஆனால் நடந்தது தலை கீழ்.


எத்தனை சாமியார்கள் வரிசையாக வந்தாலும் சிறைக்கு சென்றாலும் இன்றும் சாமியார்களிடம் நம்பிக்கையோடு படியேறும் மக்களின் மனங்களில் இருப்பதை தான் பலரால் படிக்க முடிவதில்லை. சாமியார் நோய் தீர்ப்பார் எனும் போது கடவுள் எதற்கு? அல்லது கடவுள்கள் பெரும் எண்ணிக்கையில் பூஜை அறையில் நிறைந்திருக்கையில் சாமியார்கள் எதற்கு? ஒருவேளை அந்த கடவுள் பேசுவதில்லை இவர் பேசுகிறாரே எனும் போது எழும் கவர்ச்சியா, அல்லது மனதில் நிறைந்திருக்கும் வெறுமைக்கு மருந்தாக ஒருவரின் காலடியில் விழுந்து, ஒத்த சிந்தனை உள்ள பல பேருடன் சேர்ந்து பஜனை பாடி, பிரசங்கம் கேட்டு கலைவதில் கிடைக்கும் பரஸ்பர நிம்மதியா அல்லது நேரமும் தனிமையும் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது கிடைக்கும் ஒரு வடிகாலா என்றால், அது நிறையப் பேருக்கு பிடிபடாத ரகசியம்.

பேரூந்தின் யன்னலில் ஒரு நிலவு

நகரப் பேரூந்துகளில் ஏறிப் பயணித்திருக்கிறீர்களா? அதில் தினமும் பயணிப்பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கும் வித விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கக் கூடும். பொதுவாக பேரூந்துப் பயணங்கள் சுவை மிக்கவை. எல்லாப் பயணங்களுமே சுகம் தான் என்றாலும் நீண்ட பேரூந்துப் பயணங்கள் இன்னும் ரசிக்கத் தக்கவை .

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புவிற்கு நீங்கள் 3 விதமாக பயணம் செய்து வந்திருக்க கூடும். City of trinco என்ற கப்பலில் வரும் போது கப்பல் மேல் தளத்தில் டைட்டானிக் ஜாக் ரோஸ் கணக்கில் நின்று கொண்டு கடல் காற்றை ரசித்து கொண்டும் வந்திருக்கலாம். கப்பல் திருக்கோணமலையை நெருங்கும் போது மலைகள் கடலின் நடுவே தென்படத் தொடங்கும் அழகையும் ரசிக்க முடியும். விமானத்தில் வந்திருந்தால் யாழ் நகர மத்தியில் இருக்கும் பாழடைந்த புகையிரத நிலையத்திற்கு வந்து விமான கம்பனியின் பேரூந்தில் ஏறி புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து பொதிகளை இறக்கி வைத்தால் அழகிய, முடி எல்லாம் பளபளக்கும் லாப்ரடோர் ஒன்று வரும். அது ஆடி அசைந்து வந்து முகர்ந்து பார்த்து விட்டு சென்ற பிறகு பொதிகளை எடுத்துக் கொண்டு விரையலாம். ஒருமுறை அந்த லாப்ரடோர் ஒருவரின் பொதியை முகர்ந்து பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகராமல் பிடிவாதம் பிடித்தது.உடனே அந்த பொதி உரிமையாளரை அவசர அவசரமாக கூப்பிட்ட போது, பயணிகள் எல்லாம் முகத்தில் ஆடாமல் காத்திருக்க , அவர் ஐயா, அந்த பாக் இல கருவாடு இருக்கு என்று அசடு வழிந்தபடி ஓடி வந்தார்! பிறகு ராணுவ வாகனத்தில் பலாலி வந்து சேர்ந்து விமானத்தில் ஏறினால் ஒன்றரை மணித்தியாலத்துக்குள் கொழும்பு வந்து விடும். நீங்களும் சில வேளைகளில் ராமர் பாலத்தை பார்க்க முயன்று தோற்றிருக்கலாம்.

இப்போது தரை மார்க்கமாக கொழும்புக்கு வருபவர்கள் சாவகாசமாக பேரூந்தில் வரலாம். குளிரூட்டிய, குளிரூட்டாத வாகனங்களில் இருந்து சாதாரண அரச பேரூந்து வரை சகல விதமான பேரூந்துகளில் இருந்தும் விரும்பியதை தேர்வு செய்யலாம். சொகுசுப் பேரூந்துகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக திரைக்கு வந்து சில வாரங்களேயான புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களை கண்டுகளிக்கலாம். எந்திரன் கூட விதிவிலக்கல்ல.

பயணச் சீட்டை சில நாட்களுக்கு முன்பே பெற்றுக் கொண்டாலும் நீங்கள் வரும் போது அந்த இருக்கையில் வேறு யாராவது உட்கார்ந்திருக்கலாம். அந்த குளறுபடிகளை எல்லாம் சரி செய்து இருக்கையில் சாய்ந்து கொண்டால் ஜன்னல் ஓரம் கூடவே பயணிக்கும் நிலவை நீங்களும் கவனித்திருக்கக் கூடும். பக்கத்து இருக்கைப் பயணியை கடவுள் தான் அனுப்பி வைக்கிறார், ஆத்திக வாதிகளின் பார்வையில். இனிய சுபாவம் கொண்டவராக இருந்தால் உங்கள் பயணமும் இனிதாக அமையும். குறட்டை விடுபவராகவோ, முறிகண்டியில் கச்சான் வாங்கி உங்களுக்கு சத்தம் கேட்கும் படியாக பல்லால் உடைத்துச் சாப்பிட்டு விட்டு கோதுகளை தயவு தாட்சண்யம் இல்லது பேரூந்து எங்கும் இறைப்பவராகவோ, பெரிய பொதியை கொண்டு வந்து உங்களின் கால்களுக்கு இடையில் தள்ளி விடுபவராகவோ இருந்து விட்டால், அந்தப் பயணம் உங்களுக்கு நரகம்.

நிலவு தொடர்ந்து வரும் போது கூடவே பேருந்தினுள் இளையராஜா வின் பாடல்களும் ஒலிக்கும் போது அந்த சுகத்தை நீங்களும் அனுபவித்திருக்க கூடும். சில வேளைகளில் " என் கண்மணி...என் காதலி..." என்று சிவகுமாரும் இன்னொரு பெண்ணும் பேரூந்தில் இருந்து எழுந்து வந்து பாடுவார்கள் அந்த பாடல் நினைவுக்கு வரக் கூடும். இரவு நேரம் என்ற படியால் கூடுதலாக சோகப் பாடல்கள் தான் ஒலிக்கும். பொதுவாக ஜன்னல் இருக்கைக்கு அடிபடுபவர்கள் தான் அதிகம். சாய்ந்து கொண்டு, மரங்களின் இலைகள் உரச, காற்று சில்லென்று முகத்தில் அடிக்க பயணிக்க விரும்புபவர்களுக்கு ஜன்னல் ஓரம் ஒரு சொர்க்கம். பேரூந்து புறப்பட்டு கொஞ்ச நேரத்துக்குள் ஒவ்வொருவரும் பொதுவான உலகத்தில் இருந்து விடுபட்டு தனித் தனி மனதுக்குள் ஆழ்ந்து விடுவார்கள். செத்த வீட்டுக்கு போகும் சொந்தக் காரர்கள் முதல் விடுமுறைக்குப் போகும் கும்பல் வரை சமரசம் உலாவும் இடமாக காட்சியளிக்கும்.

மெல்ல மெல்ல விடியத் தொடங்கியதும் இளையராஜா போய் தேவா வந்து விடுவார். பேரூந்தின் குலுக்கலுக்கு கானா பாடல்கள் பொருத்தமாக இருப்பதாகவே தோன்றும். கொழும்பு நகர்க்குள் வந்து விட்டாலோ அல்லது யாழ் நகருக்குள் போய் விட்டாலோ ஒவ்வொரு இடங்களிலும் பொதியை வாங்கி கொள்ளத் தயாராக உறவினர்கள் நிற்பார்கள். தமக்குரிய இடங்கள் வரும்போது ஒவ்வொருவரும் அவரவர் பாட்டில் இறங்கி போய் வாகனம் பிடித்து வீடுகளில் போய் இறங்கினால், பக்கத்து இருக்கை பயணியின் முகம் கூட ஞாபகம் இருக்காது.


நகருக்குள் குறுந்தூர பேரூந்துகளில் அவ்வளவு விலாவாரியான அனுபவங்கள் கிடைப்பதில்லை. ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர் ஒரு பெண்ணை உரச முற்பட்ட போது அந்தப் பேரூந்துக்குள்ளேயே நின்றிருந்த அந்தப் பெண்ணின் காதலன் வந்து அந்த ஆணின் சட்டைக் கழுத்தைப் பிடித்தான். அந்த அனுபவத்தை அந்த ஆண் மறந்திருக்க மாட்டார். மத்தபடி காலை வேளையில் அவசர கதியில் சென்று பேரூந்தில் ஏறி அங்கு பக்கத்தில் நிற்கும் அழகான வாலிபன் அல்லது பெண் பார்த்து சட்டென்று காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாமா என்று தீர்மானிக்க முதலே இறங்க வேண்டிய இடம் வந்து விடுகிறது. வாழ்க்கை என்ற பேரூந்துப் பயணத்தில் இறங்க வேண்டிய இடம் வரும் வரைக்கும் எல்லோரும் தொடர்ந்து பயணிக்க வேண்டியது தான்...! ( பக்கத்து இருக்கைப் பயணியை மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்- ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டவர்கள், மன்னிக்கவும்)

'வானம்'- சில நேரங்களில் சில மனிதர்கள்

சினி சிற்றி தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் ஆதவன் படத்தில் சூர்யாவின் அசத்தலான போஸ் ஒன்று இருக்கும் அந்த பெரிய போஸ்டரையும் கவனித்திருப்பீர்கள். பின்னாலேயே எந்திரனில் உலோக ஆபரணங்களை அணிந்தபடி சிட்டி-upgraded-version2 உடன் ஐஸ்வர்யாராய் பயந்தபடி நிற்கும் போஸ்டர். அங்கு இப்போது மூன்றாவது மாடியில் வானம் திரையிடப் படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்னால் அழகிய தமிழ் மகன் பாடல்கள் இசைக்க விடப் பட்டதில் பலர் நமீதாவையும் ஸ்ரேயாவையும் மனக்கண்களில் பாடல் காட்சிகளில் ஆடவைத்து கொண்டிருந்திருக்க கூடும்.

படம் தொடங்கிய போது பொதுவாக ஹீரோ பறந்து வந்து பலபேரை அடித்து வீழத்தியபடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு ஆடும் அறிமுக காட்சிக்கு வழமையாக விசில் அடிக்கும் ரசிகர்கள் அன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். காரணம், இந்த படத்தில் முதலில் அறிமுகமாகியது பரத்! கை விரல் வித்தைகளோ, பன்ச் வசனங்களோ இல்லாத சிம்பு வின் மற்றொரு படம்( விண்ணை தாண்டி வருவாயா விற்கு பிறகு).

பல வருடங்களுக்கு முதல் 'வானத்தை போல' வெளியாகி வெற்றிகரம்மாக ஓடியது உங்களுக்கும் நினைவிருக்கலாம். அந்த படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: இந்த படத்தில் இரண்டே விதமான பாத்திரங்கள் மட்டுமே. ஒன்று, நல்லவர்கள்; மற்றையது; மிக மிக நல்லவர்கள். அதேபோல வானத்திலும் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்; ஒன்று, இயல்பிலேயே நல்லவர்கள்; அல்லது, கெட்டவர்களாக இருந்து பிறகு திருந்தி நல்லவர்களாக வாழ்பவர்கள். அந்த நேர்மறையான அணுகுமுறை தான் வானம் படத்தின் விசேஷம்.

இந்தப் படத்திலும் ஐந்து பிரதான பாத்திரங்கள். பொதுவாக இப்படி ஐந்து பாத்திரங்களை கொண்ட படங்களில் ஒன்று, அந்த ஐந்து பெரும் சகோதரர்களாகவோ ( +ம்: ஆனந்தம்) அல்லது நண்பர்களாகவோ ( பாலைவனச்சோலை முதல் 4 students வரை ) அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து அதன்பிறகு ஒன்றாக பயணத்தை தொடர்பவர்களாகவோ ( ஆய்த எழுத்து) இருப்பார்கள். ஆனால் வானத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா,சரண்யா, பிரகாஷ் ராஜ் ஐவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்ளும் இடங்களே இல்லை என்று சொல்லலாம் ( அந்தக் கடைசிக் காட்சியை தவிர).

ஹீரோயிசமே காட்டாமல் வெகு இயல்பாக நடித்திருக்கும் சிம்புவை கட்டி பிடித்துப் பாராட்டலாம். ' ஸ்டுடென்ட் பவர்ன்னா என்ன தெரியுமா?' என்று கலாபவன் மணியை விரலை உயர்த்தி அடித்தொண்டையில் கத்திய சிம்புவா இது என்று ஆச்சரியம் எட்டிப் பார்க்கிறது. பணத்தை முதியவரிடம் இருந்தது பறிக்கும் காட்சியில் நடக்கும் மனப் போராட்டத்திலும் பிறகு திருந்தி கண்ணீர் வடிக்கும் இடத்திலும் நடிப்பு என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு இயல்பு. சோகமான முக பாவங்களை காட்ட முடியாமல் சுவரில் தலை வைத்து, அல்லது கையால் முகத்தை மூடிக்கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சிம்புவின் அழுகை நிஜம்.எஸ். டி. ஆர். என்று டைட்டில் இல் போடுவதைத் தான் சகிக்க முடியவில்லை. மூன்று எழுத்தில் பெயர் வைத்தால் மட்டும் முதல்வர் ஆகிவிட முடியுமா?

சர்தார்ஜி யின் வாகனத்தை முந்துவதற்காக வேகமாக காரை செலுத்தி அவரின் வாகனத்தை விபத்துக்குள்ளாக்குவதிலும் பிறகு அதே சர்தார்ஜி உதவும் போது திருந்தி புன்னகைப்பதிலும் சரி பரத் மிகைப்படாத நடிப்பு. ஏழை அம்மாவாக சரண்யா. தேசிய விருது பெற்ற நடிகையின் நடிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?( 'நாயகன்' இல் கமல்ஹாசன் இடம் நன்றி சொல்லும் இள வயது சரண்யா வை தெரியுமா?)

பிரகாஷ் ராஜ் வழக்கம் போலவே மிகச் சிறந்த நடிப்பு. முஸ்லிம் என்றதால் இழைக்கப்படும் அநியாயங்களை கண்டு குமுறும் போதும் பிறகு கொந்தளிக்கும் போதும் உணர்வுகளைப் பேசும் கண்கள் அவருக்கு. ' அபியும் நானும்' அப்பாவாக இருந்தாலும், ' செல்லம், லவ் யு டா...' என்று எதிர்ப்பட்டவர்களை போட்டு தள்ளும் வில்லன் ஆக இருந்தாலும், இரண்டையுமே உண்மை போல செய்யும் வித்தையை அவரிடம் இருந்து தான் கற்க வேண்டும். ( ஹனி மூன் முடிஞ்சுதா? ) இன்னொரு தேசிய விருது நடிகர். இருந்தாலும் 'கல்கி' , ' ஆசை' போன்ற கதாபாத்திரங்களில் ஏன் நடிக்க வைக்கின்றார்கள் இல்லை என்று தான் தெரியவில்லை.

அழகுச் சிலையாக அனுஷ்கா. சிக்கலான பாத்திரமாக இருந்தாலும் கொஞ்சமும் அருவருப்பு ஏற்படாத நடிப்பு. சொந்தமாக 'கம்பனி' தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கண்கள் பளிச்சிட பேசும் போதும், ரயில் நிலையத்தில் ஒற்றை காலை மடக்கி இருந்து தாவணியை இழுத்து விட்டுக் கொண்டு பேசும் போதும் முக பாவங்கள் அவருக்கு நன்றாகவே வருகிறது. நடிக்க வந்ததில் இருந்து குழந்தை தனமாக 'பப்லி' ஆக பேசி கொண்டு, ஹீரோ வை சுற்றி வந்து லவ் பண்ணி கொண்டு என்று 10 வருடங்களுக்கும் மேலாக அதே மாதிரி நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அனுஷ்கா ஒரு இனிய ஆச்சர்யம். முன்பு அருந்ததி இப்போது வானம். நடனத்தையும் கவனித்துக் கொண்டால் சிம்ரன் விட்ட இடத்தை பிடிக்கலாம்.

யுவனின் இசையில் ' தெய்வம் வாழ்வது எங்கே? ' பாடல் டைட்டில் ஓடும் நேரத்தில் இருந்தே மனதில் இதமான அதிர்வை ஏற்படுத்தி விடும். ( அந்த டைட்டில் மேக கூட்டங்கள் கிராபிக்ஸ் அழகு!)' நோ money' , " where இஸ் தி பார்ட்டி' ஸ்டைல் ஆட வைக்கும் பாடல். ' எவன்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் 'கோ' வில் சோனா கதைக்கும் போது காதை மூடிக் கொண்டா இருந்தார்கள்?

இந்த படத்தில் நடிப்புக்கு யாருக்கு 100 புள்ளிகள் கொடுக்கலாம் என்றால், சரண்யாவின் மாமனாராக வரும் அந்த வயதானவரைக் கவனித்தீர்களா? எங்கு, எப்படிப் பிடித்தார்களோ? அச்சு அசல் உண்மையான, கண்ணீரை வரவழைக்கும் தோற்றம். அவருக்கு கொடுக்கலாம்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் சுய நலம் இருக்கிறது. நமக்கும் கூட. நாம் தேவர்களாகும் கணங்கள் சில பொழுதுகளில் வாய்க்கின்றன. மொழி தெரியாத இடத்தில் நின்று கொண்டு வழி கேட்பவருக்கு சொல்லும் போது; முன்னால் சென்ற வாகனத்திலிருந்து விழுந்த தொப்பியை ஒரு கணம் நின்று எடுத்து கொடுக்கும் போது; பேருந்தில் காலை மிதித்து விட்டு மன்னிப்பு கேட்பவருக்கு பதிலாக பரவாயில்லை என்று புன்னகைக்கும் போது....உங்களுக்கு தண்ணீர் இல்லை என்று தெரிந்தும் அதை பக்கத்து இருக்கை முதியவருக்கு கொடுக்கும் போது.. ' சோறு ஒன்று சாப்பிட வாங்குங்கோ' என்று ஊதுபத்தியையோ பூச்சி மருந்து உருண்டைகளையோ நீட்டும் குழந்தையிடம் இருந்து உங்களுக்கு அது தேவை இல்லை என்ற போதும் அதை வாங்கும் போது....சில அபூர்வ கணங்களில் சாதாரண மனிதர்கள் என்ற நிலையில் இருந்து விடுபட்டு தெய்வங்கள்ளக எம்மை உணர்கிறோம். அந்த தருணங்கள் அரிதாகவே வாய்க்கின்றன. அந்த சில மனிதர்களின் சில நேரங்களை பற்றிய படம் தான் ' வானம்'!

( வலைப்பூவின் தலைப்புக்கு நன்றி, திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கு!)



ஒரு கை ஓசை.....

விசாக பௌர்ணமி அன்று இரவு ஒரு மணிக்கு வீதி உலா வரும் சந்தர்ப்பம் சிலவேளைகளில் உங்களுக்கும் கிடைத்திருக்க கூடும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்து நீங்கள் விளக்குகளை மட்டும் பார்க்க கூடிய அளவுக்கு மனக்கட்டுப்பாடு உடையவராக இருந்தால் (அதாவது,மோட்டார் சைக்கிள் களில் பறந்த இளம் ஜோடிகளை பார்க்காமல்) மஞ்சள் நிற மின்விளக்குகளின் ஒளியால் மூழ்கிப் போன வீதிகளின் அழகை ரசித்திருக்க முடியும். காரணம் உங்களுக்கும் தெரிந்தது தான், அன்றைக்கு புத்த ஜெயந்தி.

அகால வேளையில் வீதியை நிறைத்த வாகனங்களையும் மக்களையும் பார்க்கும் போது ஏனோ புத்தரின் ஞாபகம் தான் வரும். புத்த மத குருமார்களை விடவும் ஜென் மத குருமார்கள் தான் சுவாரசியமானவர்கள் ( சுவாரசியம் என்ற உடனே நீங்கள் நிறைய பெண் சிஷ்யைகள், மர்ம ஆச்சிரமங்கள், வழக்குகள் என்று கற்பனை பண்ணினால், நிச்சயம் உண்மை அதுவல்ல ).ஜென் என்பது புத்தத்தின் ஒரு பிரிவு.மதங்கள் என்றாலே பிரிவுகள் இருக்கும் போல! ஆனால் வீணான தத்துவ விசாரணைகளில் இருந்து விலகி, வாழ்கையை முழு சந்தோஷத்தோடு ஒவ்வொரு கணமும் நேசித்து வாழ்வதன் மூலம் நீங்களும் புத்தராகலாம் என்கிறது ஜென் . இன்னும் கொஞ்சம் இலகுவாக சொன்னால், தேநீர் குடிக்கும் போது அதை ரசித்து குடிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? ஒரு கையில் கோப்பையும் இன்னொரு கையில் கணணியும் இருக்கும். அந்த நேரம் தான் அலுவலகத்தில் செய்யாமல் ஒத்திப் போட்ட வேலைகள் வந்து பயமுறுத்தும்.படிக்க இருக்கும் பாடங்கள் நினைவுக்கு வரும். வீட்டுக்கு வரும் போது வாங்கி கொண்டு வரும் படி மனைவி நீட்டிய பட்டியல் ஞாபகம் வரும்.மகன் வாங்கி தர சொல்லி கேட்ட blackberry phone கண்முன் வந்து தாண்டவம் ஆடும். மூட்டு வலியால் வேதனை படும் அம்மாவின் முகம் ஒருமுறை வந்து போகும். இந்த கவலைகளுக்கு இடையில் கையில் தேநீர் இருந்தால் என்ன விஷம் இருந்தால் தான் என்ன? ஜென் ஐ பொறுத்த வரையில் நீங்கள் எதை செய்தாலும் அதை உணர்ந்து அணு அணுவாக ரசித்து செய்ய வேண்டு என்று சொல்கிறது.தேநீர் குடிக்கும் போது அந்த ஒவ்வொரு சொட்டும் நாவில் பட, ஒரு தியானத்தை போல அதை அருந்த வேண்டும் என்று போதிக்கிறது. இதனால் தனியான தியானம் என்று எதுவும் உங்களுக்கு தேவைப் பட போவதில்லை.

மற்ற மத குருமார்களை பொறுத்த வரையில் கூறாமல் சந்நியாசம் கொண்டு யாசகம் கேட்டு வாங்கி உண்டு ( அதாவது உணவு இலவசம்) கடவுளை காண முயலலாம். பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்து கொட்ட சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து வாழ்க்கையின் நிலையாமையை பற்றி போதிக்கலாம். ஆனால் ஜென் இல் இது வேலைக்காகாது. குருவாக இருந்தாலும் சரி, அவர் உணவை அவரே உழைத்து தேடிக்கொள்ள வேண்டும்.தேவையற்ற மரியாதைகளுக்கும் அங்கே இடமில்லை. ஒரு நாள் ஒரு ஜென் குரு குளிர் தாங்க முடியாமல் மடத்துக்கு உள்ளே இருந்த மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை எல்லாம் கொண்டு வந்து போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்த போது பார்த்து கொண்டிருந்த சீடன் பதறினான். குரு சொன்னார் ' இந்த சிலைகளில் மட்டும் தான் புத்தர் இருக்கிறார் என்று நினைகின்றாயா? ஒன்றுக்கும் உதவாத இந்த மரச் சிலைகளால் என்ன பயன்? அது தான் ஜென். ஆனால் இந்த காலத்தில் நீங்கள் சிலைகளை எரிக்க முன் கொஞ்சம் யோசித்து செய்வதே நல்லது.

குட்டிக் கதைகளுக்கு ஹைக்கூ கவிதைகளுக்கும் பெயர் போனது ஜென்.வாழ்கையை ரசித்து வாழ்ந்த ஜென் குருக்களிடம் இயற்கையை ரசிக்கும் கவிதைகளுக்கும் பஞ்சம் இல்லை. திருட வந்த திருடனிடம் தான் உடுத்தி இருந்த ஆடைகளை கூட கொடுத்து அனுப்பி விட்டு ஒரு ஜென் குரு பாடினார்;

" திருடன்
விட்டு சென்று விட்டான்...
ஜன்னல் வழியாக நிலா! "

கொஞ்சம் தில் இருந்தால் தான் இப்பிடி ஹைக்கூ எழுத முடியும். இன்னொரு குட்டி கதை. ஒரு பெண் ஞானம் பெற முயன்று கொண்டிருந்தாள். தண்ணீர் நிறைந்த பானையை மூங்கில் கம்பில் வைத்து சுமந்து கொண்டிருந்த போது பழைய மூங்கில் முறிந்து பானை உடைந்து சிதறியது. கூடவே அதுவரை தண்ணீரில் தெரிந்து கொண்டிருந்த நிலவின் பிம்பமும்! அந்த கணத்தில் அந்த பெண் ஞானம் பெற்றாள் என்று போகிறது கதை. தீட்சை தர சொல்லி வந்த சீடனை ஒரு கை ஓசையை கேட்டு வரும் படி சொல்லி அனுப்பினார் இன்னொரு குரு! ( உங்களுக்கு கேட்கிறதா?)


இன்னொரு அழகான ஜென் ஹைக்கூ;

" கவனமாக பார்த்தேன்
காட்டு மலர் பூத்திருக்கிறது,
வேலி ஓரத்தில்..."

இப்போதும் வேலி இருக்கிறது, அதே காட்டுப் பூக்கள் இப்போதும் பூக்கிறது. கொஞ்சம் வளர்ந்து விட்டோம், அதனால் கவனிக்க நேரம் தான் இருப்பதில்லை.






வழியெல்லாம் வாகைப் பூக்கள்



வாகை மரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் செய்ய வேண்டி வந்த போது தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் வாகை மரத்திலுள்ள ஒரு பொந்தில் தான் மறைத்து வைத்து விட்டு போனார்களாம். அதற்காக இந்த வலைப் பூவின் நோக்கம் பாண்டவர்களின் யுத்தத் தந்திரங்கள் பற்றி ஆராய்வதோ அவர்களை யுத்த குற்ற விசாரணைக்கு அனுப்புவதோ அல்ல. இது நிச்சயம் சில பயணங்களை பற்றியது தான்.

நாங்கள் எப்போதுமே பயணங்களுக்கான இலக்கை முன்பே வரையறை செய்து கொண்டு விடுகிறோம்.உண்மையில் இலக்கில்லாத பயணங்கள் உறைந்து போய் இருக்கும் ஆன்மாவை தட்டி எழுப்பக் கூடியவை. தமிழ் நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் ஒவ்வொரு வாரமும் எழுதிய பயணக் கட்டுரைகள் நெஞ்சின் ஓரம் ஒரு நெருடலை தரும். அவர் சக எழுத்தாளர் ஒருவருடன் பதினைந்து வருடங்கள் பயணித்து இருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரக் கூடியது.

கொழும்பில் இருந்து திருக்கோணமலைக்கு எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? நீர்கொழும்பு, ஜா-எல எல்லாம் தாண்டிய பிறகு குருணாகலை வரும். அதற்கு பிறகு தம்புள்ளை. வழி எங்கிலும் வீதியின் இரு பக்கங்களிலும் வாகை மரங்கள் பூத்து சொரிந்தது பாதையின் இரண்டு பக்கமும் வாகை பூக்கள்.பார்க்கும் போது நீங்கள் சுஜாதா வி ரசிகராக இருந்தால் அவரின் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற தலைப்பு அரிதாக ஞாபகம் வரலாம். குருணாகலை இல் வீதியால் சென்று கொண்டு இருக்கும் போது தூரத்தே பாறை தொடர் தெரிய தொடங்குகிறது. பாறை என்றால், மலை போன்ற பாறை.யாரும் வதிய முடியாத, பயிர் செய்ய முடியாத பாறை. ஊரை சுற்றி அரண் போட்டது போல இருக்கும். ஒரு மலைத் தொடர் போல வீதியில் பேருந்து செல்லச் செல்ல அதுவும் தொடர்ந்து வரும். கருப்பு நிறத்தில் பாளம் பாளமாக பாறை தொடர். தம்புள்ளை வந்ததும் கிட்ட தட்ட முழு ஊரையும் பாது காப்பது போல பிரம்மாண்டமான பாறைத் தொடர் அரணாக படுத்து கிடக்கிறது.

அந்த பாறைத் தொடரை ஒவ்வொரு நாளும் பார்க்கும் அந்த ஊர் மக்களுக்கு எவ்விதமான எண்ணங்கள் வந்து போகும்? அமைதியாக தோன்றும் இந்த பாறைக்குள் ஒரு காலத்தில் என்னென்ன நடந்திருக்கும்? கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் காலத்தில் ( அல்லது வேறு மன்னர்கள்) இந்த பாறைக் குன்றுகளுக்கு மேலே ஏறி நின்று ஆங்கிலேயருடன் யுத்தம் செய்திருப்பார்களா? தீப் பந்தங்கள் ஈட்டிகளை வீசி உக்கிரமான யுத்தம் ஒன்று நடந்திருக்குமா? இல்லை அதற்கு முன் ஆண்ட மன்னர்கள் பாறைக் குன்றுகளை அரணாக பயன் படுத்தி போர்த்துகேயர்களுடனும் ஒல்லாந்தர்களுடனும் மோதி இருப்பார்களா? இல்லை யுத்தத்தில் தோற்ற பின் மன்னன் தன் அந்தப்புர ராணிகளுடன் இந்த குன்றுகளுக்கிடையில் ஒளித்து இருந்திருப்பனா?

தம்புள்ளையில் இதை விட சீகிரியா என்ற குன்றும் இருப்பது பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை கட்டி அதனுள்ளே காலத்தால் அழியாத குகை ஓவியங்களை தீட்டச் செய்தவன் காசியப்ப மன்னன் என்று சொல்லுவார்கள்.நமக்கு அதுவல்ல முக்கியம்.இன்னொரு கிளை கதை தான் சுவாரசியமானது. அவன் தந்தை தாது சேனன் ஏதோ பெரும் செல்வத்தை புதைத்து வைத்திருக்கிறான் என்று மன்னனுக்கு சந்தேகம். சந்தேகம் வேர் விட்டு வளர மன்னனுக்கு பொறுக்க முடியாமல் போன கட்டத்தில் தந்தையை சிறையில் அடைத்து புதையலை காட்டுமாறு சித்திரவதை செய்ய உத்தரவிட்டான்! தந்தையோ ஒரு நாள் மகனின் கொடுமை தாங்க முடியாமல் வா, புதையலை காட்டுகிறேன் என்று கூறி தான் வெட்டிய கலா வாவிக்கு அழைத்து சென்று அதன் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி இது தான் மகனே நான் கண்ட புதையல் என்று கூறியதாகவும், ஏற்கனவே கடுப்பில் இருந்த காசியப்பன் தந்தையின் நக்கலை தாங்க முடியாமல் அவரை வாளால் வெட்டி கொன்றதாகவும் தகவல். ஆனால் இன்னொரு புறம், குகை ஓவியங்களை இவ்வளவு பாடுபட்டு உருவாகிய கலா ரசிகனான மன்னன் தந்தையை கொள்ளும் அளவுக்கு கொலை காரனாகவா இருந்திருப்பான் என்பது இன்னொரு சாராரின் வாதம். உண்மைக்கு யார் சாட்சி? அந்த நிகழ்வை கண்டவர்கள் தான் யார்? உண்மையில் மன்னனை யார் கொன்றது, மகனா இல்லையா என்பது மௌனமாக எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் அந்த பாறைக் குன்றுகளுக்கு தான் தெரிந்திருக்க கூடும்.

செடிகளும் கொடிகளும் காட்டு மரங்களுமாக அந்த குன்றுகள் ஒரு தனி உலகம். பகலில் சூரிய ஒளி பாறையில் பட்டு தகிக்கும்.போனால் வழி தெரியாது போகவும் நேரலாம். மன்னர் காலம் முடிந்து மக்கள் காலம் வந்த பிறகும் இன்னும் யார் யாரை எல்லாம் அதற்குள் வைத்து போட்டு தள்ளினார்களோ? யார் அதற்குள் ஒளித்து இருந்தார்களோ? எத்தனை காதலர்கள் முத்தமிட்டு தழுவிக் கொண்டார்களோ? அதை பார்த்த குன்றுகள் வெட்கப் பட்டிருக்குமோ? யார் எல்லாம் வாழ்ந்தது போதும் என்று நினைத்து அங்கிருந்து குதித்தர்களோ?எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டு எல்லா உண்மைகளையும் புதைத்து கொண்டு மௌனமாக நிற்கின்றன அந்த பாறைத் தொடர்கள்....

தலை நகரம்




கொழும்பு தெருக்களில் நடந்து போகும் போது அல்லது தனிமையான இரவுகளில் அடுக்கு மாடியின் வாசலில் நின்று வானத்தை ( சிம்பு நடித்தது அல்ல) நிமிர்ந்து பார்க்கும் போது உங்களுக்கு உள்ளுக்கும் சிலவேளைகளில் 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்.... தனிமை தனிமையோ...என்று ரஹ்மானின் அந்த சற்று கரகரப்பான அழகான குரல் கேட்டிருக்கக்கூடும். உண்மையில் எல்லோரும் சொல்வது போல நகரங்கள் அத்தனை கொடுமையானவை அல்ல. யாழ்ப்பாண பக்கங்களில் சொல்வதுண்டு கொழும்பு ஒரு கட்டடங்களால் ஆன காடு என்று. ஆனால் நகரங்களிலும் எங்கோ ஒரு இடத்தில் ஆன்மா ஒளிந்து இருக்கத்தான் செய்கிறது.

இரு மருங்கிலும் கட்டடங்கள் உயர்ந்து நின்றாலும் வீதியின் ஓரங்களில் அவற்றை அண்ணாந்து பார்த்து கொண்டு நடப்பதிலும் சின்னதாய் ஒரு சுகம் தெரிய கூடும். எல்லா கட்டடங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித முகப்பு, ஒவ்வொரு வித வர்ணம். ஏன், பெயர் கூட உண்டு. 'Seagul Court '...கம்பீரமான் பெயர் மாதிரி இல்லையா? ருத்ரன் கோர்ட் என்று பச்சை நிறத்தில் ஒன்று உண்டு.பெயரை பார்க்கும் போது கொஞ்சம் பாலா பட effect கிடைகிறதா? white ஹவுஸ் கூட இருக்கிறது.


குடும்பங்களை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு நகரம் ஒரு போதி மரம். வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த பயத்தங் காய் கறி கூட ஒரு நாள் சாப்பிட வேண்டி வரலாம். அப்பிடியே பழகி பழகி கொஞ்ச நாளில் நீத்து பூசணி வெள்ளை கறி கூட சாப்பிட தயாராகி விடுவீர்கள். அம்பரலன்காய் என்று ஒரு கறி இருக்கிறது. அதை சாப்பிட்டு விட்டு கடையை விட்டு வெளியில் வரும்போது உங்களுக்கு ஞானம் சித்திக்கவும் கூடும். ( அந்த கறி பிடித்திருப்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்!)

கார்கில்ஸ் food city இற்கு முன்பு நெடு நாட்களாக கை விரல்களில் தொழு நோய் வந்த ஒரு வயதானவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். வேறு மொழியில் கதைப்பதால் அவர் என்ன சொல்லுகிறார் என்று விளங்குவதில்லை.இப்போது சில நாட்களாக அவரை காணவில்லை. Arpico Food City இற்கு முன்பாக நிலத்தில் இருந்தபடி, சிறுநீர் செல்வதற்கு என்று தனியாக குழாய் ஒன்றும் பை ஒன்றும் பொருத்தப்பட்ட ஒரு முதியவர் இருப்பார். யாருக்கு காசு கொடுக்காமல் போனாலும் அவருக்கு மட்டும் கொடுத்து விட்டு போகும் அளவுக்கு நிச்சயம் மனிதர்களிடம் நல்ல மனது இருந்தது. அவர் முகத்தில் இன்னும் கொஞ்சம் அழகு மிச்சம் இருப்பதாகவே தோன்றும். நடக்கவே முடியாமல் படுத்தது இருக்கும் அவர் எப்போது எப்படி அந்த இடத்துக்கு ஒவ்வொரு நாளும் வருகிறார் என்று கேள்வி எழும். இப்போது அந்த கேள்வி எழுவதில்லை ஏனெனில் இப்போது சில மாதங்களாக அவரும் வருவதில்லை.... கொழும்பில் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமான இடங்கள் இருக்க கூடும். பொதுவாக கொன்கோர்ட் premier , சினி சிட்டி இரண்டுக்கும் அந்த பட்டியலில் இடம் கிடைக்கும். எந்திரன் வந்த போது கொன்கோர்ட் இல் ரஜினியின் படத்துக்கு மாலை போட்டிருந்தார்கள். " கோ" படத்துக்கு முதல் நாள் சினிசிட்டி இல் houseful ஷோ!

எப்போதாவது அரிதாக நடு இரவில் வெளியில் செல்ல கிடைத்தால் முதல் முதலாக ஒரு பாலியல் தொழிலாளியை காணும் சந்தர்பம் கிடைக்க கூடும். யாரும் அற்ற அந்த இரவில் நிலா வெளிச்சத்தில் திடும் என்று அசைந்த அந்த புடவை கடை பொம்மை போல இருந்த உருவம் ஒரு பெண் என்று தெரிந்த போது சட்டென்று ஒரு மெல்லிய அதிர்வை உணர முடியும்.நீங்களும் காண நேர்ந்தால், எந்த வித பரிதாபங்களும் அற்று கடந்து செல்வதே சரியானதாக இருக்க முடியும்.ஏன் எனில், பரிதாபம் பிறக்கும் போது நாங்கள் உயர்ந்து அவர்கள் தாழ்ந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்க முடியாது.

கிராமங்கள் நல்லது என்றோ, நகரங்கள் இயந்திரமயமானவை என்றோ ஒப்பிட்டால் நகரங்களை வெறுத்து ஒதுக்க கூடும். நகர பேரூந்துகளில் அடித்து பிடித்து ஏறி வேலைக்கு போய் பின்னேரங்களில் நத்தை வேகத்தில் அதே பேரூந்தில் வந்து வீட்டுக்கு வந்து பிறகு மீண்டும் ஒரு இரவு வாழ்க்கைக்கு தயாராவதிலோ அல்லது கையில் ஒரு கப் nescafe உடனும் இன்னொரு கையில் பழைய பேப்பர் ஒன்றுடனும் வந்து கட்டிலில் விழுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. பால்கனி இல் வெளியில் வந்து தென்னை மரங்களுக்கு இடையில் அல்லது cypruss மரங்களுக்கு இடையில் தெரியும் நிலவை பார்த்து பாடுங்கள்... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்.....( தூரத்தே நாய் ஊளையிடும் சத்தம் கேட்கிறதா...? பாட்டை நிறுத்தி விடுங்கள்...) ஒப்பீடுகள் இல்லாமல் தொடந்தும் வாழ்க்கையை ரசிப்போம்.....!
முதலில் கொஞ்சம் தேநீர்

எல்லோருக்கும் முதலில் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.இந்த வலைப்பூவின் இன் தலைப்புக்கும் இந்த ப்ளோக் இல் இடம் பெற போகும் விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ப்ளாக் இற்கு ஒரு பெயரை தேடி அலைந்து நான் பட்ட கஷ்ற்றம் எனக்கு தன தெரியும். வெகு ஜன பத்திரிகைகளில் சிறு பத்திரிகைகளில் வரும் கதைகள், கவிதைகளின் தலையங்கங்களை நக்கல் அடிப்பார்கள். பொதுவாக இப்போது பின் நவீனத்துவம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்குளுக்கு வைக்கும் பெயர்களின் அர்த்தங்கள் அவர்களுக்கே விளங்கியும் விளங்காமலும் தான் இருக்கும். முன்பு ஒரு முறை ஒரு வார இதழ் நக்கல் அடித்திருந்தது ஞாபகம் வருகிறது. உதாரணத்துக்கு, ' வண்ணத்துப் பூச்சியின் ஸ்டீல் வளையத்தில் ஒரு சாத்தான்'. ம்ம்ம்..எதாவது விளங்குகிறதா? இப்பிடித்தான்...பின்னிரவில் ஒரு நிலா நிழல்..அக்கினிக் குழம்பில் ஒரு பல்லி..இந்த ரகத்தில் தான் இருக்கும்..நான் தலைப்பு வைக்கும் பொது கூட பயந்தது இதை நினைத்து தான்..ஆனால் உலகத்தில் உள்ள எல்லா தலைப்புக்களையும் யாரோ வைத்து விட்டிருக்கிறார்கள்.asdfgh என்று டைப் பண்ணினால் மட்டும் தான் இந்த தலைப்பு உங்களுக்கு தயாராக உள்ளது என்று செய்தி வந்தது.அதனால் தான் இந்த சம்பந்தம் இல்லாத பெயர்...

எல்லோருக்கும் மனதில் சில எண்ணங்கள் இருக்கும்.ஒவ்வொரு விடயத்திலும் சில கருத்துக்கள் இருக்கும்.அனுஷ்காவா தமன்னாவா சிறந்த நடிகை என்பது போன்ற அதிகம் சிக்கல் இல்லாத விடயங்களில் இருந்து ஒசாமாவை சுட்டு கொன்றதில் அமெரிக்கா செய்தது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலா இல்லையா போன்ற அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புக்கள் முதல் சத்ய சாய் பாபா கடவுளின் அவதாரமா இல்லையா போன்ற சில விமர்சனங்களுக்கு அப்பால் பட்டதாகக் கருதப்படும் விஷயங்கள் வரை ஒவ்வொரு மனங்களிலும் ஓடும் சிந்தனைகளுக்கு பஞ்சம் இல்லை.கருத்துக்களுக்கு என்றைக்குமே தட்டுப்பாடு கிடையாது.இந்த வலைப்பூவில் இனி வரும் காலங்களில் இடம் பெறப் போகின்றவை என்னுடைய பிரத்தியேகமான எண்ணங்கள்.சிலவற்றை பார்த்து சிரிப்பு வரலாம்.அழுகை வரலாம் ஏன் கோவம் கூட பலமாக வரலாம். அனைத்து எண்ணங்களையும் விமர்சனங்களையும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதல்ல இந்த வலை பூவின் நோக்கம்; ஆக குறைந்தது மாற்று கருத்துக்களையும் செவி மடுக்க உங்களை தயார் படுத்தி கொண்டாலே அது ஒரு சந்தோஷமான புரிதல் தான்.

சரி வரும் நாட்களில் சினிமா, அரசியல், மதம்,தத்துவம், வாழ்க்கை, காதல்,உறவுகள் பற்றி நிறைய பேசுவோம்...தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வோம்....


Related Posts Plugin for WordPress, Blogger...