மண்டை ஓட்டுக் குகையும் மாயாவியும்

தனிமையில் துணைவர இப்போது எல்லோருக்குமே பல விடயங்கள் இருக்கின்றன. பேஸ்புக் ( தமிழ் அன்பர்கள் மொழியில் முகப் புத்தகம். அப்படி என்றால் twitter தமிழில் எவ்வாறு எழுதுவது? கூவி என்றா? ) மற்றும் இணையம், அரட்டை, தம், தண்ணீர், பண்பலைகள், தியேட்டரில் புதுப் படம் என்று நிறைய இருக்கிறது. ஆனால், இந்த வசதி எதுவும் கிடைத்திராத குழந்தைப் பருவங்களில் பலருக்கும் கதைகள் தான் துணையாக இருந்திருக்கும். சிலர் பிறக்கும் போதே கதை சொல்லுபவர்களும் பிறந்து விடுகிறார்கள் அவர்களுக்காகவே. பலருக்கும் கதாபாத்திரங்கள் புத்தகங்களில் இருந்து நேரடியாக எழுந்து வந்து உலாவுவார்கள்.

நீங்களும் சிறிய குழந்தையாக இருந்த போது பெட் டைம் ஸ்டோரீஸ் ( இதை நிச்சயம் தமிழ்ப் படுத்த முடியாது ) என்ற தலைப்பில் சில வழுக்கல் அட்டைப் புத்தகங்களைக் கண்டிருப்பீர்கள். இந்தக் கதைகளில் வருபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக் கதாநாயகர்கள், நாயகிகள். மதராசப் பட்டினம் எமி ஜாக்சன் போல ஒரு மெல்லிய அழகி சின்ட்ரெல்லா. இவளைத் தேடி ஒற்றைக் கால் செருப்புடன் அலையும் இளவரசன். நாயகி கூந்தலை அவிழ்க்க, அதைப் பிடித்து மாடிகளைக் கடந்து வரும் இன்னொரு இளவரசன். உறங்கும் அழகியும் அவளுக்கு உதவி செய்யும் குள்ளர்களும் என்று அது ஒரு விசித்திர உலகம். இளவரசன் வந்து முத்தமிட்டு எழுப்பும் வரை மீளாத் துயிலில் இருக்கும் இளவரசி. அவரை விதைகளைக் கொண்டு வந்து விதைத்ததும் அவரைக் கொடி வானை முட்ட முளைத்து அதில் ஒரு மாளிகை, அதில் நிறையப் பணத்துடன் இருக்கும் ஒரு சூனியக்காரி. இந்தக் கதைகளில் ஒரு அடிப்படை விடயம், இதில் எல்லாவற்றிலுமே சூனியக்காரிகள் இருப்பார்கள். இவர்கள் அழகிய யுவதிகளைக் கொடுமைப் படுத்துபவர்களாகவும் சிறுவர்களை அடுப்பில் உட்கார வைத்து சமைத்து சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். இந்தக் கதைகளைக் கேட்டே பலரும் இரவில் எழுந்து அலறி ஓடியிருக்கக் கூடும்.

கொஞ்சம் வளர்ந்ததும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற புத்தகங்கள் புழக்கத்துக்கு வந்திருக்கும். நீங்களும் அம்புலிமாமா வேதாளத்துக்கு அந்த நாளில் ஒரு ரசிகராக இருந்திருக்கக் கூடும். அம்புலி மாமாவில் எப்பவும் அந்தத் தொடர்கதைக்கு ஒரே படம் தான். விக்ரமாதித்தன் ஒரு கையில் வாளுடன் தோளில் வேதாளத்தைச் சுமந்து செல்லும் படம். விக்ரமாதித்தன் மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வர்ணத்தில் உடை அணிந்திருப்பார். வேதாளம் நீட்டி முழக்கி கதை சொல்லி விட்டு ஏதோ கல்லூரி பேராசிரியர் போல கேள்வி கேட்கும். விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு நூறாகி விடும் என்று ஆர்.டி.எக்ஸ். வைக்கப் போவது போல மிரட்டல் வேறு. விக்ரமன் ஒவ்வொரு முறையும் சரியான பதில் சொல்லி விடுவதால் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விடும். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் அடுத்த வாரம் வந்து வேதாளத்தைச் சுமந்து கொண்டு போவார். விக்ரமன் மௌனம் கலைத்தால் வேதாளத்தைக் கொண்டு செல்ல முடியாது, அதே நேரம் பதில் தெரிந்தால் சொல்லியே ஆக வேண்டும். இப்படி ஒரு சிக்கலான புரிந்துணர்வு ஒப்பந்தம்! எப்படா மன்னனுக்கு பதில் தெரியாமல் போகும் என்று வாரா வாரம் குழந்தைகள் காத்திருந்தது தான் மிச்சம்.பாலமித்ராவில் ஒரு தொடர்கதை வந்தது சிலருக்கு இன்னும் நினைவிருக்கலாம். ஒரு ஆண், அவனுக்கு கோபம் வந்தால், கொரில்லாவாக மாறி விடுவான். அவன் குடித்த ஒரு மருந்தின் விளைவு. இந்த கதையைத் திருடித் தான் ஹோலிவுட் இல் 'ஹல்க்' படத்தை எடுத்தார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்!

கொஞ்சம் வளர்ந்து பள்ளிக் கூட நூலகங்களுக்கு செல்லத் தொடங்கி கொஞ்சம் உலகம் பிடிபடத் தொடங்கியதும் பலரும் முதலில் அடிமையாவது கொமிக்ஸ் புத்தகங்களுக்கு தான். ( அதாவது 'காமிக்ஸ்') ராணி கொமிக்ஸ் உங்களில் அநேகமானவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகியிருக்கும். நீங்களும் மாயாவியின் ரசிகராக இருந்திருக்கக் கூடும். இந்த மாயாவி முகமூடியை கழட்டுவதில்லை. மண்டை ஒட்டுக் குகையில் வசிப்பார். இவர் முஷ்டியால் அடித்தால், அடிபட்ட இடத்தில் மாயாவியின் மோதிரத்தில் இருக்கும் மண்டை ஓட்டுச் சின்னம் பதியும். காட்டு வாசிகளின் நண்பன். ஹீரோ என்ற குதிரையில் டெவில் என்ற நாயையும் கூட்டிக் கொண்டு இவர் காடுகளுக்கு நடுவில் பறக்கும் ஸ்டைலே தனி. அநியாயம் செய்பவர்கள், கடல் கொள்ளையர்கள், கொலை செய்யத் திட்டமிடுபவர்கள் எல்லோருக்கும் மாயாவி ஒரு சிம்ம சொப்பனம். காட்டுக்குள்ளே மாயாவி மலை முகடு, அலெக்சாண்டர் பயன் படுத்திய தங்கக் கோப்பை, சீசரின் வாள் எல்லாம் இருக்கும் ஒரு பொக்கிஷ அறை எல்லாம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி லூக்கா ( ஒபமா மாதிரி தான் இருப்பார்!) கூட மாயாவிடம் தான் உதவி கேட்பார். டயானா என்று ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ரெக்ஸ் என்று ஒரு இளவரசன் என்று மாயாவிக்குக் குடும்பமும் உண்டு. யாருக்காவது ஆபத்து என்றால் முரசு அறைந்து காற்றில் செய்தியைப் பறக்க விடுவார்கள். சாகாவரம் பெற்றவர் என்று எதிரிகள் அலறுவார்கள். ( உண்மையில் மாயாவிகள் பரம்பரையாக வருகிறார்கள். இது எதிரிகளுக்கு தெரியாது !)

இந்த மாயாவியின் பூர்வீகமும் மேலைத் தேசம் தான். (f)பாந்தம் மெனஸ் என்று திரைப்படமும் 97-98 காலப் பகுதியில் வந்து அங்கே பெரிய வெற்றி. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு கௌ போய்ஸ் எனப்படுகின்ற குதிரைப் பண்ணை வைத்திருக்கும் இளைஞர்களின் கதைகள் கொமிக்சாக வரும். அதைத் தேடி எல்லோரும் ஓடுவார்கள். இந்தக் கதைகள் பெரும்பாலும் அமெரிக்காவின் டெக்சாஸ், அரிசோனா மாநிலங்களில் நடக்கும். வில்லன்கள் பெரும்பாலும் செவ்விந்தியர்களாக இருப்பார்கள். அதிலும் நவஜோக்கள், அபாச்சேக்கள் என்று பிரிவுகள் உண்டு. டெக்ஸ் வில்லர் மற்றும் டைகரின் கதைகள் கொமிக்ஸ் உலகில் பிரசித்தம். 'இரத்தப் படலம்' பெரும்பாலானோரின் கொமிக்ஸ் சேகரிப்புக்களில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். கிட்டத் தட்ட இதுவும் பழி வாங்கும் அத்தியாயங்கள் நிறைத்த இரத்தச் சரித்திரம். அதே போல நகைச் சுவை கௌ போயாக வரும் லக்கி லுக்கின் கதைகளுக்கு சிரிக்க என்று ஒரு நாள் ஒதுக்க வேண்டி வரும். " டால்டன் நகரம்" , நீங்கள் கவலையில் அமிழ்ந்திருக்கும் போது படிக்க வேண்டிய புத்தகம்.

கொமிக்ஸ் இன் சிறப்பு என்ன என்றால், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். மாண்ட்ரேக் என்றால் மாயாஜால விரும்பிகளுக்கு பிடிக்கும். ஜேம்ஸ் போண்ட் அதிரடி மற்றும் சாகசப் பிரியர்களுக்கு. இரும்புக்கை மாயாவியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரின் ஒரு கரம் உலோகத்தால் ஆனது. நினைத்த போது உருவத்தை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு உண்டு. அப்படி மறைந்திருக்கும் வேளையில் இவரின் உலோகக் கை மட்டும் அந்தரத்தில் மிதப்பது போல பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியும் !

நீங்களும் உங்கள் குழந்தைப் பருவங்களில் இந்தக் கதாபாத்திரங்கள் பலவற்றை உங்கள் மானசீக ஹீரோக்களாக கொண்டிருந்திருக்கக் கூடும். இந்த வினோத உலகம் குழந்தைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமானது. இந்தப் பருவத்தில் நெருங்கியிருக்கும் இந்த ஹீரோக்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களிடமிருந்து விலகி, அடுத்த குழந்தைகளைத் தேடித் போய் விடுகிறார்கள். மாயாவியும் ஹாரி போர்டரும் இருந்த இடத்தை தல யும் தளபதியும் வந்து பிடித்து விடுகிறார்கள் போலும்! உங்கள் வீட்டுப் பழைய புத்தக மூட்டைகளுக்குள்ளும் பக்கங்கள் கிழிந்து பூச்சி அரித்த ஒரு அம்புலி மாமாவோ லயன் கொமிக்ஸ் ஒன்றோ ஒளிந்து இருந்து நீங்கள் தூசு தட்டும் சமயங்களில் திடீரென்று வெளிப் படக் கூடும். அவற்றை மீண்டும் தொட்டு வாசிக்கும் தருணங்களில் உங்கள் வயதும் குறைந்து, 'தங்கக் கடற்கரையில் ஒருவர் காத்திருக்கிறார் ' என்று குரன் ( மாயாவியின் உதவி ஆள்) மாயாவிக்கு முரசு அறைந்து அறிவிக்கும் சத்தம் உங்கள் காதுகளுக்குள்ளும் மீண்டும் லேசாகக் கேட்கலாம்!
2 Responses
  1. அ. டினேஷ் Says:

    சுப்பர்,
    நன்றி..திருப்பி அந்த குழந்தைப் பருவ நினைவுக்களுக்கு அழைத்துச் சென்றதற்கு..!!
    மாயாவிதான் என்னுடைய ஹீரோ :)


  2. அது ஒரு அழகிய காலம்.மீட்டிப்பார்க்க உதவியமைக்கு நன்றி.


Related Posts Plugin for WordPress, Blogger...