குற்றப் பத்திரிகை

கமலின் மற்றுமொரு தீர்க்கதரிசனம் அன்னா ஹசாரே வடிவில் உண்மையாகி இருந்தது. ( அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி கதைத்ததுக்கு பிறகு உண்மையான சுனாமி வந்தது ஞாபகம் இருக்கிறதா? ) அன்னா ஹசாரே இந்தியாவில் ஊழலுக்கு எதிரான லோக் பால் குழுவை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அரசும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உறுதியளித்தது. ஹசாரே ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்தியன் படத்திலும் கமல் சுபாஷ் சந்திர போஸ் இன் இராணுவத்தில் இருந்த வீரர். அது மறந்தாலும் கப்பல் ஏறிப் போயாச்சு பாடல் இன்னும் மறந்திருக்காது. ஹசாரே வெள்ளை நிற கதர் உடுப்பும் அதே உஜாலா வெள்ளை கொங்கிரஸ் தொப்பியுமாக அசல் இந்தியன் தாத்தா போலவே இருப்பார். அவரது போராட்டம் மக்கள் எழுச்சியைத் தூண்டி காந்தியவதமும் அகிம்சை முறைப் போராட்டமும் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை என்று புரியவைத்தது. சேனாபதிக்கும் ஹசாரேக்கும் இருந்த பெரிய வித்தியாசம் அவர் கத்தியைத் தூக்கி மற்றவர்களைக் களைஎடுத்தார். இவர் பட்டினி என்ற கத்தியால் தன்னைத் தானே கொல்லத் துணிந்தார். அவரது உண்ணாவிரதத்துக்கு கிடைத்த வெற்றி மாபெரும் வெற்றியாக இந்திய ஊடகங்களால் கொண்டாடப்பட்டது. விகடன் ஹசாரே () இந்தியன் தாத்தா என்று ஒரு குறுந்தொடரும் வெளியிட்டது.

பிறகு நடந்தது தான் கவலைக்குரியது. ராம்தேவ் பாபா என்கிற கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கும் யோகா குரு கறுப்புப் பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க முனைந்ததும் போலிஸ் வந்து அவரை பலவந்தமாக அகற்றியதும் நீங்களும் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். இதனால், அடுத்ததாக முகேஷ் அம்பானியும் வந்து உண்ணாவிரதம் இருப்பாரோ என்று சந்தேகம் எழுகிறது.

அடுத்த வல்லரசு நாடாக முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்றால் அடுத்த போர்க்குற்ற வாளியாக முயற்சி செய்து கொண்டிருக்கும் இலங்கையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் போதே உங்களுக்கும் திகிலாக இருக்கக் கூடும். இலங்கையில் கறுப்புப் பணம் இருந்தாலும் இந்தியா அளவுக்கு அது பொருளாதாரத்தில் ( அப்படி ஒன்று இருந்தால் தானே என்று நீங்கள் முணுமுணுப்பது தெரியும்) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தோன்றாது ஏனெனில் இங்கே இந்தியா மாதிரி சுவிஸ் வங்கியில் பில்லியன்களாக பத்துக்கும் அளவுக்கு பெரிய பண முதலைகள் பலர் இல்லை. அம்பானி, இன்(f)போசிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்களுடன் ஒப்பிட்டால் இங்கு இருப்பவர்கள் வெறும் பாரைமீன்கள். ஆனால், ஊழல், லஞ்சம் இரண்டும் பத்து மதன்கள் வந்தாலும் கார்ட்டூன் போட முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கின்றன.

அந்நியன் படத்தில் விக்ரம் நாட்டு நடப்பை பார்த்து விட்டு கோபமும் ஆற்றாமையுமாக தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றுவாரே நினைவிருக்கிறதா? அதே மாதிரி இப்போது கிடாரத்தில் தண்ணீரை அள்ளித் தலையில் ஊற்றினாலும் கவலை தீராது. மற்ற எந்த துறையில் லஞ்சம் இருந்தாலும் உங்களால் கொஞ்சமேனும் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் போலிஸ் துறையில் லஞ்சம் கொடுத்துத் தான் காரியம் சாதிக்க முடியும் என்றால் உங்களுக்கும் இயலாமை மனதில் கனக்கும். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றாக வேண்டும். அதை வழங்குவதற்கு என்று முறையான ஒரு அலுவலகக் கட்டமைப்போ, சரியான நடைமுரைகோ கியியாது. கொஞ்சம் காசு கொடுத்தால், அன்று மாலையே அனுமதிப் பத்திரம் உங்கள் தொலைநகல் தேடி வந்து சேரும். காசு கொடுக்காவிட்டாலோ, அது சூப்பர் ஸ்டார் மாதிரி. எப்போது வரும் எப்படி வரும் என்று யாராலயும் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு சரியாக வந்தும் சேராது. என்னத்தைக் கன்னையா பாஷையில் சொல்வதென்றால் வரும்....ஆனா வராது... அந்த அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அனைவரும் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். அனுமதி எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாதது தான் சோகம். " நீ எவளவு குடுத்தநீ?" " அதை விடக் குறைஞ்ச ரேட் இல நான் எடுத்து தாறன்" போன்ற உரையாடல்களையும் நீங்கள் கேட்க முடியும்.

பொருட்களைத் திருடியவர்கள் கைத்தொலைபேசியில் பொருட்களைப் பறி கொடுத்தவர்களிடமே கதைத்துக் கொண்டு உல்லாசமாகத் திரிவதும் காவல் துறையால் அந்த இலக்கத்தைப் பின்தொடர்ந்து கூட திருடர்கள் இருக்கும் இடத்தைப் பிடிக்க முடியாது இருப்பதும் இங்கு மட்டுமே இருக்கும் அதிசயம். இந்தியாவில் இருக்கும் ( தனக்கு சொந்தமில்லாத ) காணியை விற்ற ஒருவரிடம் இருந்து அந்த பத்திரங்களைக் கைப்பற்றி உரிமையாளரிடம் கொடுப்பதற்கு என்ன ரேட் தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் பதினைந்து லட்சம் ருபாய்! பணம் தருவதற்கு சம்மதித்த படியால், இப்போது குற்ற விசாரணைப் பிரிவு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, என அனைத்து உள் பிரிவுகளும் இப்போது காணியை விற்றவரின் பின்னால்! அன்புச் செல்வன் IPS., ஆறுச் சாமி AC, துரை'சிங்கம்' AC, வோல்டர் வெற்றிவேல், அலெக்ஸ் பாண்டியன், ராகவன் போல காவல் துறை அதிகாரிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் ஆகக் கூடும்.

ஹசாரே போல இங்கும் யாராவது உண்ணாவிரதம் இருந்தால் நல்லது என்று யோசிக்கிறீர்களா? இந்தியாவில் என்றால் கொஞ்சம் யோசித்து விட்டு பிறகு கோரிக்கைக்குத் தலைசாய்த்து விடுவார்கள். ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடிக்கலாம். மிஞ்சி மிஞ்சிப் போனால் கண்ணீர் புகை அடித்து ஆளைத் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் படுக்க வைப்பார்கள். இங்கு என்றால், ஹசாரேயின் வீட்டைத் தேடிஅவரது உடையின் நிறத்திலேயே ஒரு வாகனம் வந்திருக்கும். அதை விட பேசாமல் நீங்களும் உண்ணாவிரத யோசனையைக் கைவிட்டு, கொன்கோட் இல் மாவீரன் பார்த்து விட்டு வந்து வீட்டில் ஒரு குட்டித் தூக்கம் போடுவதே சிறந்தது!
0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...