அவன்-இவன்- எவன்?

தெகிவளையில் உள்ள கொன்கோர்ட் கொழும்பில் உள்ள நல்ல தியேட்டர்களில் ஒன்று. ஒ.டி.சி., மற்றும் பல்கனி இல் இருந்து நீங்கள் படத்தைக் கண்டுகளிக்கலாம். ( ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டுமே!) டிஜிட்டல் ஒலிநயம் மற்றும் அளவுக்கதிகமான குளிரூட்டல். ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ( பெயரைக் கொஞ்சம் சுருக்கக் கூடாதா...அவரின் இடையின் அளவைப் போல...) ஏரியில் விழுந்து கட்டையை பிடித்து எழும்பும் போதும் விக்ரமுடன் ஈரம் சொட்டச் சொட்ட மலையில் ஏறும் பொழுதும் பிறகு விறகு மூட்டி குளிர் காயும் போதும், படம் பார்த்தவர்களுக்கும் ஏதோ தாங்களும் தண்ணீரில் விழுந்து குளிரில் நடுங்குவது போல உணர்வு...எல்லாம் .சி. யின் புண்ணியம்! படம் முழுக்க தண்ணீரும் குளிரும் மழையும் என்று இருந்தபடியால், பார்ப்பவர்களுக்கும் ஏதோ 4D தியேட்டரில் படம் பார்த்த (f)பெக்ட் கிடைத்தது.

வழமையாக மதிய நேரக் காட்சி மூன்று மணிக்கு நடக்கும். புதுப் படங்கள் என்றால் நான்கு காட்சிகள் என்றபடியால், மூன்று மணிக்காட்சிக்கு பதில் 4.30 மணிக்கு போடுவார்கள். இந்த நேரக் குழப்பத்தால் புதுப் படம், அதுவும் பாலாவின் படம், போதாக்குறைக்கு சனிக்கிழமை வேறு என்று மூன்று மணிக்காட்சிக்கு 2 மணிக்கே நீங்கள் போய் இருந்தால் உங்களின் நிலை பரிதாபம். இன்னும் இரண்டரை மணித்தியாலங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் கதை வருவதே அபூர்வம். விஷால், ஆர்யா என்று இரு முக்கியமான ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம், அதுவும் பாலாவின் படம் என்று எதிர்பார்ப்புகளுடன் முன் பனியா..முதல் மழையா...என்று காதோரம் பாடல் ரீங்காரம் செய்ய போய் உட்கார்ந்தவர்கள் நிச்சயம் ஏமாந்து தான் இருப்பார்கள். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் வரிசையில் இதுவும் ஒரு சீரியஸ் ஆன, பார்த்து பல நாட்கள் ஆனாலும் நெஞ்சில் தாக்கம் மிச்சமிருக்கிற படமாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டிருந்தால், மன்னிக்கவும்! படம் தொடங்கியதிலிருந்து, கடைசி ஒரு இருபது நிமிடம் வரை சிரிப்பு, சிரிப்பு மட்டுமே. ஆர்யா, விஷால் இருவரும் அப்பா போல பாசம் வைத்திருக்கும் ஒருவருக்கு நடக்கும் கொடூரம், அதற்கு ஹீரோக்கள் இருவரும் கொடுக்கும் தண்டனை இது தான் படத்தின் ஒரு வரிக் கதை. ( ஆங்கிலத்தில் 'one line' ). ஒரு வரிக் கதை மட்டும் அல்ல, பத்து வரி எழுதினாலும் கதை இது தான். பாலா அவர்களின் படங்களில் பொதுவாக கனமான கதை இருக்கும். இந்தப் படத்தின் கதையோ காற்று போல இருக்கிறது.

சேது படத்தில் எத்தனையோ கட்டங்கள் கண்ணீரை வரவழைத்து இருக்கும். நந்த படத்திலும் அப்படித் தான். பிதா மகன் படத்தில் லைலா கதறும் அந்த கட்டத்தில் கண்கலங்காதவர்கள் குறைவு. சேதுவில் விக்ரம் மீண்டும் மனநல மருத்துவமனைக்கு போகும் காட்சியும், நந்தாவில் சூர்யாவின் மரணமும் துக்கம் தொண்டையை இருக்கும் கட்டங்கள். பிதாமகனில் சூர்யா இறந்து விக்ரமும் கைவிடப்பட்டு திரும்பவும் சுடுகாட்டுக்கே செல்லும் கட்டமும் அப்படியே. ஆனால், அவன்-இவனில் அப்படி மனது கனக்கும் கட்டங்களோ, கண்ணீர் வரப்பார்க்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. முழுவதும் நகைச்சுவைப் படமாக இருந்தாலும் கூட, அடிப்படையான கதை என்று ஒன்று இருக்க வேண்டாமா? முழு நீள நகைச்சுவைப் படங்கள் கூட ஒரு கதையோட்டத்தைத் தழுவித் தானே இருப்பது வழக்கம். உதாரணத்துக்கு காதலிக்க நேரமில்லையில் தொடக்கி பஞ்ச தந்திரம், பாஸ் () பாஸ்கரன் வரை. படம் முழுக்க ஒருவரை ஒருவர் திட்டுவதும் பிறகு பாசத்தைப் பொழிவதுமாக இருந்தால் எப்படி இருக்கும்?

படம் முழுவதும் தாராளமாக கெட்டவார்த்தைகள். தணிக்கையில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.பெண்களின் உடல் பாகங்கள் என்றால் தானே பிரச்சனை வரும் என்றதாலோ என்னவோ, ஆண்கள், மற்றும் பொதுவான பாகங்கள் மற்றும் பல நாளாந்த வாழ்க்கையில் சொல்ல நா கூசுகிற வார்த்தைகள். நீங்களுமா பாலா? இரட்டை அர்த்தம் அல்ல, நேரடியான ஒரே அர்த்தம் தான். படத்தை கதை இல்லாமல், கொமெடியை கொண்டே நகர்த்துவது என்று முடிவு செய்த பிறகு கடைசியில் அத்தனை கொடூரம் எதற்கு?


விஷால் அற்புதமான நடிகர் என்று இந்த படத்தில் தெரிகிறது. விக்ரம் இற்கும் சூர்யாக்கும் ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது போல விஷாலுக்கும் கிடைக்கலாம். ஆர்யா படம் முழுக்க ரசிக்கும் படியான கலாட்டா. குடித்துவிட்டு ஜமீன்தாருடன் அடிக்கும் கொட்டத்தில் தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. விஷாலின் மாறுகண் இந்தப் படத்திற்கு அதிகப்படியான உழைப்பு. பெண் வேடத்தில் குத்தாட்டம் போடும் போது அவளவு தத்ரூபமான உடல் அசைவுகள். ஜமீன்தாராக வரும் G.M.குமார் மிகச் சிறந்த இயல்பான நடிப்பு. படம் ஆரம்பிக்கும் போது சிம்மாசனத்தில் படுத்திருந்து குழந்தை போல சிரிப்பதில் இருந்து ஒரு விஷால் ஆர்யா இருவருடனும் சிறு பிள்ளைபோல் பாசத்தைக் காட்டுவதில் இருந்து kungfu panda போல இருக்கிறார். போயும் போயும் இந்தப் படத்தில் இந்த கதைக்காக அவரை இந்தளவுக்கு சேனல் 4 ரேஞ்சுக்கு கொடுமைப் படுத்தியிருக்க வேண்டுமா? அபிதகுஜலாம்பாளை ராக் பண்ணுவதில் இருந்து, லைலாவை டப்பா உருட்டி செயின் அபகரிப்பதில் இருந்து, இன்னும் எத்தனை காலத்துக்கு ஹீரோ, ஹீரோயினை வெருட்டியே காதல் வர வழைப்பதாக பாலா காட்டப் போகிறார்?

ஒரே ஒரு கட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் சூர்யா அவ்வளவு ஹான்ட்சம். தியேட்டரில் விசில் சத்தம். ஏழாம் அறிவு எப்போது? நந்தாவில் கண்களில் சாம்பல் நிற லென்ஸ் வைத்து லைலாவிடம் உருகும் சூர்யா ஒருகணம் எல்லோர் ஞாபகத்திலும் வந்து போய் இருக்கக் கூடும். பிதாமகன் 'இளங்காற்று வீசுதே...' பாடல் இசையும் காட்சியும் இன்னும் பலருக்கு நினைவில் வந்துபோகும். அவன்-இவன் பாடல்கள் தெகிவளையில் இருந்து பம்பலப்பிட்டி வரை கூட தாங்காது போல இருக்கிறது.

தனது வழமையான பாணியில் இருந்து வேறுபட்டு புதிய படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் பாலா. ஆனால் ஷேக்ஸ்பியருக்கு சோகம் தான் விசேஷம் என்பது போல பாலா, பாலாவாக இருப்பது தானே அழகு. நகைச்சுவைப் படங்கள் எடுப்பதற்கு தான் சிம்பு தேவன் இல் இருந்து M.ராஜேஷ் வரை இருக்கிறார்களே. அப்படி வித்தியாசமான, நகைச்சுவைப் படமாகவே எடுத்தாலும், அதிலும் பாலா என்கிற முத்திரையின் தரம் கெடாமல் பார்த்துக் கொள்வது தானே அழகு. இல்லா விட்டால், ட்ரைலர் இல் ஆவது எதையாவது காட்டி எதிபார்ப்பைக் குறைத்திருக்க வேண்டாமா? ( பாலா இவ்வளவு விரைவாக படத்தை முடித்ததுமே உங்களுக்கு ஒரு மெல்லிய சந்தேகம் வந்திருக்க வேண்டாமா?!) முழு நீள நகைச் சுவையையை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஒருவேளை படம் ஒரு விருந்தாக இருக்கக் கூடும். மற்றபடி, பாலாவின் அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டியது தான்.
1 Response
  1. நல்ல வேளை நான் தப்பிச்சிற்றன்..


Related Posts Plugin for WordPress, Blogger...